;
Athirady Tamil News

ஆப்கன் நிலநடுக்கம்: 1,450-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

0

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக அதிகரித்துள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக.31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் அவ்விரு மாகாணங்களிலும் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, தற்போது வரை 1,457 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படையினர் சென்றடைய மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை, மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசை ரஷியா மட்டுமே தற்போது வரை அங்கீகரித்துள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய, ஜப்பான், ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.