;
Athirady Tamil News

17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன?- போலீஸ் விசாரணை

0

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இம்மாடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா (வயது 40). இவருக்கு திருமணமாகி 17 வயதில் கருண்யா என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுவர்ணா படுக்கை அறையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

பின்னர் சுவர்ணா அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சுவர்ணாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், சுவர்ணாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசாரும், பெற்றோரும் விரைந்து சென்றனர். உட்புறமாக பூட்டப்பட்டு இருந்த கதவை போலீசார் உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கை அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கருண்யாவும், மின்விசிறியில் சுவர்ணா தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தனர். இதுபற்றி போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சுவர்ணா தனது மகளை கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதும் தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக சுவர்ணா இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது தெரியவில்லை. கருண்யா யாரையாவது காதலித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தில் சுவர்ணா மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? என்பதும் தெரியவில்லை.

இதையடுத்து தாய், மகள் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 17 வயது மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.