;
Athirady Tamil News

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

0

மாஸ்கோ,

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா கைகோர்த்துள்ளது.

30,000 புதிய வீரர்கள்
உக்ரைன் எல்லையில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன், ரஷ்ய அதிபர் புதின் கைகோர்த்துள்ளார். இதன்படி, கூடுதலாக 30 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா தனது நாட்டுக்குள் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முகாம்களில் தீவிர ஏற்பாடு
இந்த 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியான வொரோனேஷ் பிராந்தியத்தில் கடந்த ஜூன் மாதம் முதலே மிக தீவிரமாக நடந்து வருவதாக உக்ரைன் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே 14 ஆயிரம் வடகொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது.

ராணுவ வீரர்கள் மட்டுமன்றி, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சர்களையும் ரஷ்யாவிற்கு வடகொரியா வழங்க தொடங்கியுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு ஆபத்து
ரஷ்யாவுடன் சேர்ந்து போர் புரிவதன் மூலம், வடகொரிய ராணுவம் நவீன ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் மின்னணு யுத்த முறைகளில் நேரடி போர்க்கள அனுபவத்தை பெறுகிறது. இது உக்ரைனுக்கு மட்டுமல்ல, வடகொரியாவின் எல்லையில் இருக்கும் தென்கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் அனைத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.