மனைவி மச்சான் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர் – சாவகச்சேரியில் பட்டப்பகலில் பயங்கரம்
நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்
கணவன் – மனைவிக்கு இடையிலான பிணக்கு காரணமாக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது , கணவன் , மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோர் மன்றுக்கு சமூகம் அளித்திருந்தனர்
வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் , நீதிமன்றுக்கு வெளியே வந்த கணவன் , அப்பகுதியில் இருந்த கடை ஒன்றுக்கு முன்பாக சிறிய ரக கத்தியுடன் காத்திருந்துள்ளார்.
அவ்வேளை அவரது மனைவியும் , மச்சானும் மோட்டார் சைக்கிளில் வீதியில் வந்து கொண்டிருந்த வேளை , வீதியோரமாக நின்ற கணவன் வீதியில் திடீரென பாய்ந்து , மோட்டார் சைக்கிள் ஓட்டியான மச்சான் மீது திடீர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
அதன் போது மோட்டார் சைக்கிள் பயணித்தவர்கள் நிலைதடுமாறி வீதியில் விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த முற்பட்டவேளை ,அங்கிருந்தவர்கள் தாக்குதலாளியை மடக்கி பிடித்தனர்
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , தாக்குதலாளியான கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
