ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் என்ற நாடே இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட்டதையடுத்து இடைக்கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல், ஹோர்முஸ் நீரினையைக் கடக்கும் போது, ஈரான் அந்தக் கப்பலை தாக்கியுள்ளது.
அந்தக் கப்பலானது, ஈரான் கடலோரப் பகுதியில் செல்லாமல் மற்றொரு பதையில் சென்றதால் அதனை தாக்கியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்ததாவது:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான நிலையங்கள் போன்ற முக்கிய தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இனிமேலும், அமெரிக்காவால் பொறுமையாக இருக்க முடியாது. இது தொடர்ந்தால், ராணுவ நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்படும். அப்படி நடந்தால், ஈரான் என்ற நாடு இனி இருக்காது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.