;
Athirady Tamil News

5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!

0

மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

கடந்த 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த எதிர்பாராத சம்பவத்தில் கீறல் காயங்களுக்குள்ளான அந்தச் சிறுவன், உடனடியாக மத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனின் திடீர் அலறல் சத்தம்
வீட்டுத் தோட்டத்தில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் திடீர் அலறல் சத்தம் கேட்டதும், அவனது தந்தை உடனடியாக வெளியே ஓடிவந்தார். அப்போது ஒரு பெரிய கழுகு அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டு மேலே பறக்க முயன்றதைக் கண்டார்.

உடனடியாகச் செயல்பட்ட தந்தை, அந்தக் கழுகை அடித்துச் சிறுவனை அதன் பிடியிலிருந்து விடுவித்தார். பின்னர் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இச்சம்பவம் குறித்து மாத்தறை பொது மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கழுகின் தாக்குதலால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்டார். மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து முதலுதவி மற்றும் மருந்துகளைப் பெற்ற பிறகு, சிறுவன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தாத்தா, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் தனது மகன் உடனடியாக வெளியே ஓடிவந்து செயல்பட்டதாலேயே அவனது உயிர் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டதாகக் கூறினார்.

தனது வாழ்நாளில் இது போன்ற பெரிய கழுகை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், இச்சம்பவத்திற்குப் பிறகும் அச்சிறுவன் இன்னும் கடும் பயத்துடனும் காய்ச்சல் போன்ற நிலையிலும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.