தீவிரமடையும் எல்நினோ தாக்கம் – இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இந்த பிரிவின் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் தெரிவிக்கையில்,
உயர்ந்த நிலையை எட்டியுள்ள வெப்பநிலை
இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த வெப்பமான சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், உடல் நீரிழப்புக்கு உள்ளாவதை தடுக்க சுத்தமான தண்ணீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
எல் நினோவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்கள்
மேலும், சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வெப்பத்தாக்கம் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.