அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிவு: உயர் அதிகாரிகளுக்கு பொய் கண்டறியும் சோதனை!
அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு பற்றிய தகவல்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதனைக் கசியவிட்டவர்களைக் கண்டறிய, ராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை பென்டகன் தொடங்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானுடன் பல மாதங்களாக தொடர்ந்து வரும் போரால், அமெரிக்காவின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஆயுதங்களின் கையிருப்புக் குறைந்துள்ளதாகவும், அதனால் அவற்றை அளவுடன் பயன்படுத்தி வருவதாகவும் ஜூலை மாதம் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்திகளை ராணுவ அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். இதுபற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “எங்களிடம் பல்வேறு வகை வெடிபொருள்கள் உள்ளன. மிகவும், அதிநவீன ஆயுதங்கள் சிலவற்றை மேலும் அதிகமாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று பேசினார்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களுக்கு எவ்வாறு செய்திகள் கசிந்தன என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் ராணுவ உயர் அதிகாரிகள் 50 பேரிடம் கடந்த வெள்ளியன்று விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னுக்கு சோதனை நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
இந்தச் செய்திகள் தொடர்பாக பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல்லிடம் கேள்வி எழுப்புகையில், உள் விவகாரங்கள் மற்றும் விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.ஆனால் “தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிவதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரணை நடத்தி வருகிறோம். அரசின் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது, நமது பாதுகாப்பையும் உலகம் முழுவதும் பணியில் உள்ள நமது ராணுவப் பாதுகாப்பையும் உறுதி செய்ய மிகவும் முக்கியமானது,” என்று தெரிவித்தார்.
அரசு மற்றும் ராணுவ ரகசியங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு அனுமதி வழங்கப்படுவது மற்றும் அதனை புதுப்பிப்பது போன்ற சமயங்களில் பொய் கண்டறியும் சோதனை வழக்கமாக நடத்தப்படும் ஒன்றாகும்.
ஆனால், ரகசியங்கள் கசிவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்படுவது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை என செய்திகள் தெரிவித்துள்ளன.