;
Athirady Tamil News

இஸ்ரோ: ராக்கெட் ஏவுதள அமைவிடம் முடிவானது எப்படி? கலாமுக்கு நாசா தந்த ஏமாற்றம் என்ன? !! (கட்டுரை)

0

சந்திரயான் – 3ஐ வெற்றிகரமாக நிலாவில் இறக்கியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். ஆனால், இந்தப் பயணத்தின் துவக்கப்புள்ளி 60 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல சவால்களை எதிர்கொண்டு நிலவைத் தொட்டிருக்கிறது இஸ்ரோ. இது ஒரு மகத்தான சாகசத்தின் சுருக்கமான வரலாறு.

சுதந்திர இந்தியாவின் மிகச் சவாலான காலகட்டமான 1960களில் துவங்குகிறது இஸ்ரோவின் வரலாறு. 1957 அக்டோபர் 4ஆம் தேதி சோவியத் ரஷ்யா ஸ்புட்னிக் – 1 என்ற முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது. இது உலகம் முழுவதுமே விண்வெளி தொடர்பான ஆய்வுகளின் மீதும் அதன் சாத்தியங்களின் மீதும் கவனத்தைத் திருப்பியது.

பிறந்து பத்தாண்டுகளே ஆகியிருந்த, வளரத் துடித்துக்கொண்டிருந்த இந்தியாவும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. புதிய இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு நாடாக வளர்த்தெடுப்பதில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில், இந்தியாவில் அணு சக்திக்கான துறைதான், அறிவியலுக்கான பிரதான துறையாக இருந்தது. இந்தத் துறையில், ஆய்வுக்கான ஒரு பிரிவாக 1961ல் விண்வெளி அறிவியலையும் சேர்க்க முடிவுசெய்தது மத்திய அரசு.

இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு நாடாக வளர்த்தெடுப்பதில் ஜவஹர்லால் நேரு பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்
இந்தியாவுக்கு ராக்கெட் ஏவும் தொழில்நுட்பம் எப்போது தெரியும் ?

அப்போது அணுசக்தித் துறையின் தலைவராக டாக்டர் ஹோமிபாபா இருந்து வந்தார். அடுத்த ஆறு மாதங்களிலேயே, அதாவது 1962 பிப்ரவரியில் அணுசக்தித் துறைக்குள்ளேயே ஒரு தனிப் பிரிவாக Indian National Committee on Space Research (INCOSPAR) உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு டாக்டர் விக்ரம் சாராபாய் தலைவராக்கப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் பிற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுவது, அமைதிக்காக விண்வெளி அறிவியலை எப்படி பயன்படுத்துவது என ஆராய்வது ஆகியவை இதன் நோக்கங்களாக இருந்தன.

அப்போது பல நாடுகள், விண்வெளிக்கான ராக்கெட்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவந்தன. இந்தியாவும் சிறிய அளவில் அந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் சோதனை முறையில் ஒரு ராக்கெட்டை ஏவிப் பார்க்க இன்கோஸ்பார் முடிவு செய்தது. ஏவுதளத்தை திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள தும்பாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பல தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த முயற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தும்பா ஏவுதளத்தை அமைக்கும் முயற்சிகள் 1962ல் துவங்கின. ஆனால், ராக்கெட்டுக்கான தொழில்நுட்பம் தேவைப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மேம்பட்டிருந்த நாடுகள், அவற்றை பெரும் ரகசியமாக வைத்திருந்தன. மற்றொரு பக்கம் ‘சர்வதேச இந்தியப் பெருங்கடல் ஆய்வு’, ‘சர்வதேச சூரிய அமைதி ஆண்டு ஆய்வு’ ஆகியவை தீவிரமெடுத்திருந்தன.

இந்த ஆய்வுகளுக்கு தேவையான வளிமண்டலத் தரவுகளைச் சேமிக்க, புவி காந்த மையப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு ஏவுதளம் தேவைப்பட்டது.

இந்த நிலையில், தென்னிந்தியா அதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்றும் அங்கு ஒரு சர்வதேச ஆய்வு மையத்தை அமைக்கலாம் என்றும் இந்தியா ஒரு திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்தது.

இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் பணியில் இருந்த இளம் விஞ்ஞானிகளான ஆர். ஆராவமுதன், ராமகிருஷ்ணராவ், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் நாசாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர்.

ராக்கெட்களை ஏவும் தொழில்நுட்பம், அவற்றைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி பெறுவதுதான் நோக்கம் என்றாலும், நாசாவில் எதிர்பார்த்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்பது ஏமாற்றமே.

இருந்த போதும், கருவிகளை அவர்கள் சொந்தமாக கையாள அனுமதிக்கப்பட்டனர். இது இந்த இளம் விஞ்ஞானிகளுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தது.

விண்வெளி ஆய்வுகளில் முதலீடு செய்வதன் மூலம் மனிதனின் நிஜமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்பது உணரப்பட்டது.

1963ல் நைக் – அபாசே ராக்கெட் ஒன்றை இந்தியாவுக்குத் தர முன்வந்தது நாசா. 1963ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தும்பாவிலிருந்து இந்த முதல் ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளியில் இந்திய வெற்றியின் முதல் புள்ளி இதுதான்.

1964ல் ஒரு அதிசயம் நடந்தது. அமெரிக்கா ஏவிய செயற்கைக்கோளின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அந்தத் தருணத்தில்தான், விண்வெளி ஆய்வுகளில் முதலீடு செய்வதன் மூலம் மனிதனின் நிஜமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்பது உணரப்பட்டது.

இதற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து எம் – 100 ரக ராக்கெட்களும் ஃப்ரான்சிலிருந்து சென்டார் வகை ராக்கெட்களும் இறக்குமதி செய்யப்பட்டு ஏவப்பட்டன.

1965ல் தும்பாவில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (SSTC) அமைக்கப்பட்டது. அதிலேயே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துதலின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும் தொழில்நுட்பங்களைத் தாங்களாகவே உருவாக்கின.

1966 முதல் 77 வரையிலும் பிறகு 1980 முதல் 84 வரையிலும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, விண்வெளி ஆய்வில் உண்மையிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்

1968ல் தும்பா விண்வெளி நிலையத்தை, ஐக்கிய நாடுகள் சபைக்கு அர்ப்பணித்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. 1969ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோ உருவாக்கப்பட்டு, அணுசக்தித் துறைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு, 1972ல் இஸ்ரோவை புதிதாக உருவாக்கப்பட்ட விண்வெளித் துறைக்குக் கீழ் கொண்டுவந்தது மத்திய அரசு. பிரதமருக்கு மட்டும் பதிலளிக்கும் வகையில் விண்வெளி ஆணையம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்திலேயே துவங்கிவிட்டாலும், அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் இந்திரா காந்தி.

1966 முதல் 77 வரையிலும் பிறகு 1980 முதல் 84 வரையிலும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, விண்வெளி ஆய்வில் உண்மையிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

விண்வெளித் துறையிலும் அணுசக்தித் துறையிலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்ட அறிக்கையை 1970ஆம் ஆண்டு ஜூலையில் அரசிடம் அளித்தார் டாக்டர் விக்ரம் சாராபாய்.

இதன்படி, 1970களில் ஒரு செயற்கைக்கோள்களை செலுத்தும் ராக்கெட்டை உருவாக்குவதுதான் இஸ்ரோவின் முக்கிய நோக்கமாக அமைந்தது. அதேபோல, பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படக்கூடிய இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட்) ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

1981 ஜுன் 19ஆம் தேதி ஏரியன் பாஸஞ்சர் பேலோட் எக்ஸ்பெரிமெண்ட் (ஆப்பிள்) என்ற பெயரில் தொலைத்தொடர்புக்கான சோதனை செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

1971 டிசம்பரில் விக்ரம் சாராபாய் காலமான நிலையில், எலெக்ட்ரானிக்ஸ் ஆணையத்தில் இருந்த எம்.ஜி.கே. மேனனை இஸ்ரோவின் தலைவராக நியமித்தார். ஆனால், ஐஐஎஸ்சியின் இயக்குநராக இருந்த சதீஷ் தவான், இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று கருதினார் மேனன்.

அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றிருந்த சதீஷ் தவான் நாடு திரும்பியதும், அவரிடம் இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டது.

அவர் இரண்டு நிபந்தனைகளை விதித்தார். ஒன்று, இஸ்ரோவின் தலைமையகத்தை பெங்களூருக்கு மாற்ற வேண்டும். இரண்டாவதாக ஐஐஎஸ்சியின் இயக்குநராகவும் தொடர அனுமதிக்க வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகளையும் அரசு ஏற்றுக்கொண்டது. சதீஷ் தவான் தலைவராக இருந்த காலகட்டம் இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிக முக்கியமானதாக அமைந்தது.

இந்தியா முதல் முறையாக, தானே சொந்தமாகத் தயாரித்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக்கோள் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி சோவியத் யூனியனிலிருந்து காஸ்மோஸ் 3 எம் ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.

இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

இதற்கிடையில் சொந்தமாக ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்துவந்தது. 1979 ஆகஸ்டில் சொந்தமாகத் தயாரித்த ஒரு ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனால், 1980ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி எஸ்எல்வி – 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது ரோஹிணி – 1 என்ற 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

இந்தச் சாதனையின் மூலமாக சொந்தமாக ராக்கெட், செயற்கைக்கோள் ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை கண்காணிக்கும் அமைப்புகளையும் ஏற்படுத்திய 6வது நாடாக இந்தியா உருவெடுத்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் அப்போது இருந்தது.

இதற்குப் பிறகு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களில் கவனம் செலுத்த இந்தியா முடிவுசெய்தது. 1981 ஜுன் 19ஆம் தேதி ஏரியன் பாஸஞ்சர் பேலோட் எக்ஸ்பெரிமெண்ட் (ஆப்பிள்) என்ற பெயரில் தொலைத்தொடர்புக்கான சோதனை செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

இந்த காலகட்டத்தில் இஸ்ரோவின் நிர்வாக அமைப்பும் மாறியது. மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்குப் பதிலாக, ராக்கெட்டை உருவாக்குதல், ஏவுதல், செயற்கைக்கோள்களை உருவாக்குதல் என பல விரிவுகள் உருவாக்கப்பட்டு இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவும் தனித்துவத்துடன் விரைவாக இயங்க முடிந்தது.

1972-84வரை இஸ்ரோவின் தலைவராக சதீஷ் தவான் இருந்த காலகட்டத்தில், அந்த அமைப்பு வெகுதூரம் பயணித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா விண்வெளி ஆய்வுத் துறை ஒரு முக்கியமான நாடாக மாறத்துவங்கியது. இஸ்ரோவில் அதிக ஆண்டுகள் தலைவராக இருந்தவரும் சதீஷ் தவான்தான்.

1983வரை நடந்த ராக்கெட் சோதனைகளில், இந்தியா 40 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால், இது போதாது என்பது விரைவிலேயே உணரப்பட்டது. ஆகவே, அடுத்ததாக 150 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்துசெல்லும் ஏவுவாகனங்களை தயாரிக்க முடிவுசெய்தது இஸ்ரோ.

Augmented satellite launch vehicle – ASLV என்ற பெயரில் 150 கிலோ எடையை 400 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தக்கூடிய ராக்கெட்களை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. ஆனால், 1987, 88ல் நடந்த சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

பிறகு, 1992 மே 20ஆம் தேதி மூன்றாவதாக ஏவப்பட்ட ஏஎஸ்எல்வி – டி3, 105 கிலோ எடையுடைய SROSS என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. இருந்தபோதும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இது போதுமானதாக இல்லை. வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் கூடுதல் எடையுடைய செயற்கைக் கோள்களை நிலை நிறுத்த இன்னும் மேம்பட்ட ராக்கெட்கள் தேவைப்பட்டன. இதையடுத்து துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனத்தை (பிஎஸ்எல்வி) உருவாக்கும் முயற்சியில் இறங்கியது இந்தியா.

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை வெகுதூரத்திற்கு முன்னெடுத்துச் சென்ற பெருமை இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டையே சாரும்.

1993 செப்டம்பர் 20ல் ஏவப்பட்ட முதல் பிஎஸ்எல்வி தோல்வியடைந்தது. 1994 அக்டோபரில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி வெற்றிகரமாக அமைந்தது. இதற்கு அடுத்த கால் நூற்றாண்டிற்கு பிஎஸ்எல்வியே மிக நம்பகமான ஏவுவாகனமாக அமைந்தது. கிட்டத்தட்ட 95 சதவீத பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வெற்றிகரமாக தங்கள் பணியை நிறைவுசெய்தன.

இந்த பிஎஸ்எல்வியின் சாதனைகளில் மூன்றை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒன்று, 2008ல் சந்திரயான் – 1ஐ நிலவுக்கு ஏவியது.

இரண்டாவது, 2013ல் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் Mars Orbiter Spacecraftஐ ஏவியது. மூன்றாவதாக, 2017 பிப்ரவரியில் 104 செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

இதற்கிடையில் கிரையோஜெனிக் எஞ்சின்களை உருவாக்கும் முயற்சிகள் நடக்க ஆரம்பித்தன. கிரையோஜெனிக் எஞ்சின்கள் மிகச் சிக்கலானவை.

இவற்றில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் எரிபொருளாக பயன்படுத்தப்படும் மிகக் குளிர்ந்த நிலையிலேயே இவை திரவமாக மாறும் என்பதால், அந்த அளவு குளிரைத் தாங்கக்கூடிய பொருளில் எரிபொருள் கலன் அமைய வேண்டும். அதே நேரம் எஞ்சினின் வெப்பம் 2,000 டிகிரியைத் தாண்டும்.

இந்தத் தொழில்நுட்பத்தை அளிக்க வளர்ந்த நாடுகள் முன்வராத நிலையில், சோவியத் ரஷ்யா இதற்கு முன்வந்தது. பெருந்தொகைக்கு கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையின்படி, மூன்று கிரையோஜெனிக் எஞ்சின்களைத் தருவதோடு, தொழில்நுட்பத்தையும் சோவியத் அளிக்கும் எனக் கூறப்பட்டது.

ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே சோவியத் உடைந்துவிட, தொழில்நுட்பத்தை அளிக்க ரஷ்யா தயங்கியது. பிறகு, இந்தியா அளித்த தொகைக்கு 6 கிரையோஜெனிக் எஞ்சின்களை மட்டுமே தர முடியும் என்று கூறியது. ஆனால், தொழில்நுட்பத்தை தர மறுத்துவிட்டது.

இதையடுத்து கிரையோஜெனிக் எஞ்சின்களைச் சொந்தமாகத் தயாரிக்க முடிவுசெய்தது இந்தியா. 2010 ஏப்ரல் 15ஆம் தேதி ஏவப்பட்ட முதல் கிரையோஜெனிக் எஞ்சின் தோல்வியடைந்தது.

இதற்குப் பிறகு 2014, 15ல் ஆரம்பித்து அடுத்தடுத்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வெற்றியடைய ஆரம்பித்தன. தற்போதைய சூழலில் இந்தியாவால் 4 டன் எடையை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

1990வாக்கில் இந்தியா நிலவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பவது குறித்து பேச ஆரம்பித்தது. இதற்குப் பிறகு இதற்கான விரிவான திட்டத்தை இஸ்ரோ மத்திய அரசிடம் முன்வைத்தது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், சந்திரயான் – 1 திட்டம் உருவானது. இந்தத் திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார்.

2008 அக்டோபர் 28ஆம் தேதி சந்திரயான் – 1 விண்ணில் ஏவப்பட்டது. நிலவைச் சுற்ற ஆரம்பித்த சந்திரயான், அங்கிருந்து தகவல்களை வெற்றிகரமாக அனுப்ப ஆரம்பித்தது. ஆனால், 2 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டிய சந்திரயான், 2009 ஆகஸ்ட் 29ஆம் தேதியோடு அதாவது 312 நாட்களில் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.

இருந்தபோதும், இந்த சோதனையில் ஒரு முக்கியமான தகவலை சந்திரயான் அனுப்பியது. அதாவது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான் கண்டுபிடித்தது. இந்தத் திட்டத்தின் வெற்றி, விண்வெளி சக்திகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை வெகுவாக உயர்த்தியது.

செவ்வாய் கிரக சோதனைகளைப் பொறுத்தவரை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற நாடாக இந்தியா உருவெடுத்தது

செவ்வாய் கிரகத்தை ஆராய ஒரு கருவியை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர் 2007ல் முன்வைத்தார். இந்தத் திட்டத்திற்கு 2012ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை அறிவித்தார் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

செவ்வாய் கிரகம் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளோடு ஒப்பிடுகையில் இது ஒரு தொழில்நுட்ப பரிசோதனை முயற்சிதான்.

2013 நவம்பர் ஐந்தாம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான செயற்கைக்கோள் – MOM – ஏவப்பட்டது. 2013 நவம்பர் 30ஆம் தேதி புவியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்ட எம்ஓஎம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாயின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.

அதாவது பூமியிலிருந்து புறப்பட்டு, 298 நாட்களுக்குப் பிறகு, இது நடந்தது. ஆனால், செவ்வாய் கிரக சோதனைகளைப் பொறுத்தவரை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற நாடாக இந்தியா உருவெடுத்தது.

2019ல் சந்திரயான் – 2ஐ ஏவத் தயாரானது இஸ்ரோ. 2019 ஜூலை 15ஆம் தேதி சந்திரயானைச் சுமந்துகொண்டு ராக்கெட் புறப்பட வேண்டும்.

இதற்கடுத்ததாக சந்திரயான் – 2 திட்டமிடப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்தத் திட்டத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்தத் திட்டத்தை ரஷ்யக் கூட்டமைப்புடன் இணைந்து 2014ல் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் நிலவைச் சுற்றும் ஒரு செயற்கைக்கோள், நிலவில் தரையிறங்கும் கருவி, ஒரு ரோவர் ஆகியவற்றை ஏவத் திட்டமிடப்பட்டது. ஆனால், குறித்த காலத்திற்குள் ரஷ்யா தரவேண்டிய கருவிகளைத் தரவில்லை. இதையடுத்து தாமாகவே இவற்றைத் தயாரிக்க முடிவெடுத்தது இஸ்ரோ.

ஒருவழியாக, 2019ல் சந்திரயான் – 2ஐ ஏவத் தயாரானது இஸ்ரோ. 2019 ஜூலை 15ஆம் தேதி சந்திரயானைச் சுமந்துகொண்டு ராக்கெட் புறப்பட வேண்டும்.

ஆனால், கடைசி நேரத்தில் ராக்கெட்டில் இருந்த சிறு தவறு கண்டுபிடிக்கப்பட்டு, ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. பிறகு, ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் – 2 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் ‘பிரக்ஞான்’ என்ற ரோவரை சுமந்துசென்ற ‘விக்ரம் லாண்டர்’ செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரையிறங்க வேண்டும்.

ஆனால், தரையிறங்க 2.1 கி.மீ.தூரமே இருந்த நிலையில் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதிலாக தரையில் மோதியது. இதில் விக்ரம் லாண்டர் பழுதாகி செயல்படாமல் போனது. இருந்தபோதும், இந்தத் திட்டத்தில் இணைத்து அனுப்பப்பட்ட நிலவைச் சுற்றும் செயற்கைக்கோள் சிறப்பாகவே செயல்பட்டது.
1960களில் மிக சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்திய விண்வெளி முயற்சிகள், சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியின் மூலம் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன.

இதற்குப் பிறகு ஏவப்பட்ட சந்திரயான் மூன்று, தற்போது வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு சூரியனை ஆராய்வதற்கான திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் எனத் தீவிரமாக செயல்பட்டுவருகிறது இஸ்ரோ.

இதற்கிடையில் இந்தியா சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இவற்றை ஏவ தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ஒரு ஏவுதளம் உருவாக்கப்பட்டுவருகிறது. இடைப்பட்ட காலத்தில் ஆய்வு, கண்காணிப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிவிட்டது இஸ்ரோ.

தற்போது உலகின் மிக முக்கியமான விண்வெளி ஏஜென்சிகளில் இஸ்ரோவும் ஒன்று. விண்வெளி ஆய்வுகளைப் பொறுத்தவரை, மிகப் பெரிய அளவில் வர்த்தக வாய்ப்புகள் இருப்பது 1980களில் உணரப்பட்டது.

இதையடுத்து 1992ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, வர்த்தக முயற்சிகளுக்காக ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 33க்கும் மேற்பட்ட நாடுகளுக்காக சுமார் 350 செயற்கைக்கோள்களை ஏவித் தந்துள்ளது இஸ்ரோ.

1960களில் மிக சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்திய விண்வெளி முயற்சிகள், சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியின் மூலம் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.