;
Athirady Tamil News

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரசுக்கு முதல் உயிரிழப்பு – எச்சரிக்கும் புதிய ஆய்வு..!!

0

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 1,239 பேர் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

லண்டனில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் தடுப்பூசி போட்டு சென்றனர். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன்

முன்னதாக நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போரிஸ் ஜான்சன், ஒமைக்ரான் அலை குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஒமைக்ரான் அவசர தடுப்பூசி பிரச்சாரத்தையும் அவர் அறிவித்தார்.

இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள இந்த ஆண்டு இறுதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிய வகை வைரஸ் ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாப்பு சுவரை எழுப்பும் நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான போரில் இப்போது நாம் அவசர நிலையை எதிர்கொள்கிறோம் என்று நான் அச்சப்படுகிறேன். எங்கள் நண்பர்களையும், அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க, தடுப்பூசி பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவது அவசியம் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.

பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சாஜித் ஜாவித் வெளியிட்டுள்ள செய்தியில், ஒமைக்ரான் வைரஸ் தனி வேகத்தில் பரவுவதாகவும், ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் நோய்த்தொற்று இரட்டிப்பாகும் என்றும் எச்சரித்தார்.

தடுப்பூசிக்கும், வைரஸுக்கும் இடையிலான போட்டியில் நாங்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரிட்டன் அரசு கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கா விட்டால், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் 74,800 பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.