;
Athirady Tamil News

இலங்கையில் தொடர்ந்தும் மோசமாக மீறப்பட்டு வரும் ஊடக சுதந்திரம்: வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!

0

இலங்கையில் தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் மோசமாக மீறப்பட்டு வருகின்றது என்பதை கொழும்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நான்கு ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பின் மேற்கொண்ட தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என வவுனியா ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக கோட்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (09.07) ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டது.

குறித்த சம்பவத்தின் போது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக களத்தில் நின்று மக்களுக்கு உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் நால்வரும் தாம் ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும், பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்காது ஆட்சியாளர்கள், ஆயுத முனையில் அதனை அடக்கி ஆழ முற்பட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடக அடக்கு முறை என்பது தொடர்கின்றது என்பதை இச் சம்பவம் புடம் போட்டு காட்டுகின்றது.

தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விரைவில் நலன்பெற இறைவனை வேண்டுகின்றோம். அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வவுனியா ஊடக அமையம் கோருவதுடன், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நான்கு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்துகிறது.

மேலும், இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் நீதியான ஒரு விசாரணை இடம்பெற வேண்டும். அதற்கு சர்வதேச சமூகமும், ஓட்டு மொத்த ஊடக அமைப்புக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடத்தில் மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுப்படுத்த முடியும் என்பதுடன் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடக சுதந்திரமும் பாதுக்காக்கப்படும் என ஊடக அமையம் நம்புகின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.