;
Athirady Tamil News

கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் படுகொலை- தொடர் கொலைகளால் மக்கள் பீதி..!!

0

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் பிரவீன் அந்தப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு இவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பிரவீனின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. சாலையில் நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பிரவீன் கொலையை கண்டித்து சுள்ளியா, கடபா, புத்தூர் ஆகிய 3 தாலுகாக்களில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நெட்டார் கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக 21 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இந்த நிலையில் பிரவீன் கொலையில் தொடர்புடையதாக ஹாவேரி மாவட்டம் சவனூரை சேர்ந்த ஜாகீர் (29), பெல்லாரேவை சேர்ந்த முகமது ஷபிக் (27) ஆகிய 2 பேரை போலீசார் கேராளாவில் வைத்து கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சூரத்கல் மங்களாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 23). தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர். இவர் நேற்று இரவு மூடா மார்க்கெட் அருகே உள்ள செருப்பு கடைக்கு செருப்பு வாங்கச் சென்றார். இதற்கிடையே கடைக்குள் நுழைந்த 2 வாலிபர்கள் முகமது பாசிலை கத்தியால் தாக்கினர். இதனால் பயந்துபோன அந்த முகமத் பாசில் ஓடிச்சென்று துணிக்கடைக்குள் நுழைந்தார். அங்கும் அவரை துரத்திச் சென்ற மர்மநபர்கள் முகமத் பாசிலை கத்தியால் குத்தினர். அப்போது கடைக்காரர் கற்களை வீசித் துரத்த முயன்றார். பலத்த காயமடைந்த முகமத் பாசில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர். அக்கம்பக்கத்தினர் திரண்டு முகமத் பாசிலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூரத்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், முகமது பாசிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில், முகமது பாசில் கொலை செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சூரத்கல், பனம்பூர், முல்கி, பஜ்பே ஆகிய போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்ட்டு உள்ளது. ஷியா சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் முகமது பாசில் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.