;
Athirady Tamil News

மனசாட்சியுடன் கூட்டணி வைக்க முடியுமா?

0

பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணிக்க வேண்டுமென நாடு முழுவதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரசாரம் செய்தார். அதனை ஏற்றே மொட்டுக்கட்சிக்கு 143 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்திருந்தனர் என தெரிவிக்கும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மஹிந்தவின் கொள்கைகளை மொட்டுக் கட்சி நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷ 2020ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தார். அவரின் குரல் பதிவுகளை மீள கேட்க வேண்டும். அனைத்து பிரசாரக் கூட்டங்களிலும் நானும் கலந்துகொண்டிருந்தேன். ஐ.தே.க தொடர்பிலும் ஐ.தே.கவின் தலைவர் தொடர்பிலும் நாம் என்ன கூறினோம்? ஐ.தே.கவின் தலைவர் தொடர்பில் மஹிந்த கடும் வார்த்தைகளைக்கூடப் பயன்படுத்தியிருந்தார் என்றார்.

ஐ.தே.கவை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றே நாம் அப்போது கூறினோம். இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவினர் மனசாட்சியுடன் ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க முடியுமா?

மஹிந்த ராஜபக்‌ஷ அன்று கூறிய கருத்துக்களுடனேயே நான் இப்போதும் இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து நாடு முழுக்க சென்றிருந்தோம். அன்றுபோல இன்றும் மஹிந்தவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மஹிந்தவின் கொள்கைகளை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.