;
Athirady Tamil News

3 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!!

0

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் வருகிற மார்ச் 12-ந்தேதி முடிவடைகிறது. அதே போல் மேகாலயா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 15-ந்தேதியுடன், திரிபுரா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 22-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று பிற்பகலில் 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

இதையொட்டி அவரது தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் 3 மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். மாநில அரசியல் கட்சியினர், சிவில் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று பிற்பகலில் அறிவிக்கிறார். நாகலாந்து மாநிலத்தில் பா.ஜனதா-நாகா மக்கள் முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த நெப்பியூ ரியோ முதல்-மந்திரியாக உள்ளார். மேகாலயாவில் பாரதிய ஜனதா-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு முதல்-மந்திரியாக தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் கொங்கல் சங்மா உள்ளார். திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மாணிக் சாகா முதல்-மந்திரியாக உள்ளார். குஜராத், இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.