;
Athirady Tamil News

கடமையை செய்யும் கவர்னர்களை விமர்சனம் செய்கிறார்கள்- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!!

0

தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதல்வர்கள், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர்கள், கவர்னர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கவர்னர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலுங்கானாவைப்போல சில நேரங்களில் மட்டும் கவர்னருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநில அரசு கவர்னரின் நெறிமுறையின்படி இல்லை. தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளை மீறுகிறது என்று கேளுங்கள். எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும் செய்து வருகிறேன்.

என்னிடம் சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நான் அவற்றை மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்கிறேன். ஆனால் அரசு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. குடியரசு தின விழாவை நடத்துவது குறித்து இதுவரை மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை. அரசியல் சாசனப் பதவிக்கும், கவர்னர் நாற்காலிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளின்படி இல்லை, கவர்னருக்கு ஏன் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் நான் திரும்பத் திரும்ப கேட்டு வருகிறேன்.

நெறிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என அரசு பதில் அளித்தால், மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். கவர்னராக தனது வரம்புகளை ஒருபோதும் மீறவில்லை. கவர்னருக்கு எதிராக முதல்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எனக்கு சிலர் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.