;
Athirady Tamil News

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 25 வழக்குகள் பதிவு- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல் !!

0

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சியினர் பங்கேற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விடுமுறைகள் குறித்து கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். வேறு உங்கள் தரப்பில் இடம் அடையாளம் காணப்பட்டு இருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் யார்? யார்? வருவார்கள்.

எத்தனை பேர்? வருவார்கள். வாகன எண் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் எந்த பகுதியில் நடத்துகிறார்களோ அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் ஊர்வலம் தொடங்கி எந்த வழியாக ஊர்வலம் வந்து நிறைவடைகிறது என்பது குறித்த விவரங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கார்களில் கட்சி சின்னம் கொடிகளை பொருத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

கட்சிக்கொடிகளை அகற்றுவது, பதாகை, பேனர்களை முறையாக மூடாமல் இருப்பது இது போன்றது தொடர்பாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 வழக்குகள், வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வழக்குகள், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 வழக்குகள் என மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.