உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
விசேட கலந்துரையாடல்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் உயர்மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சை நடத்துவதில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் அதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.