;
Athirady Tamil News

தேர்தலை பிற்போடும் புதிய முயற்சி!!

0

பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன ஊடாக அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள்,மோசடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்காதிருக்கும் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறைசேரியின் செயலாளர் மூலம் தேர்தலுக்கான பணத்தை வழங்க முடியாது என்றும், அரசாங்கத்திடம் பணமில்லை என்றும், சமூக நலப்பணிகள் உட்பட சம்பளம் வழங்குவதற்குக் கூட முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தேர்தலை சீர்குலைக்கும் புதிய நடவடிக்கையாக நாளை அரசியலமைப்பு பேரவையின் ஊடாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றியமைத்து தேர்தல் ஆணைக்குழுவை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களின் இறையாண்மையில் கை வைத்தால் அதற்கு வழங்கும் தண்டனை நாட்டின் சட்டப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹபுஹின்ன சூட்சமம் மற்றும் திறைசேரி செயலாளர் ஊடாக மக்கள் இறையாண்மையை நாசம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆந் திகதி நடைபெறவுள்ள தேர்தலை சீர்குலைக்க அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை பயன்படுத்தினால், நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் அந்த சூட்சம நடவடிக்கையை நிச்சயமாக தோற்கடிப்பதுடன் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், நாளை கூடும் அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டங்களைச் சேர்க்க வேண்டாம் என்றும், சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்றும் அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்நாட்டில் மக்களின் இறையாண்மையை கெடுக்கும் சகல சதிகளையும் முறியடிக்க தலைமைத்துவம் வழங்குவதாகவும், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எந்நேரத்திலும் முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் அவசியம் என அன்று தான் கூறிய போது ​​சேறுபூசும் விதமாக குரல் எழுப்பியவர்கள் தற்போது தேர்தலை நடத்துமாறு கோருவதாகவும், அரசாங்கத்தின் தேர்தலை ஒத்திவைக்கும் அனைத்து முயற்சிகளையும் தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.