;
Athirady Tamil News

திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? 4 மணி வரை 81.10 சதவீத வாக்குப்பதிவு!!

0

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. திரிபுராவில் வங்காள மொழி பேசும் மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். இதனால் மேற்கு வங்காளத்தின் தாக்கம் காரணமாக அந்த மாநிலத்தில் சுமார் 27 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆட்சியே நடந்து வந்தது. பா.ஜனதா கட்சி கடந்த 2018-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

மானிக் சாகா தலைமையில் அங்கு தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவிகாலம் அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. 55 இடங்களிலும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 6 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின. இரு கட்சிகளும் அம்பிநகர் தொகுதியில் மட்டும் சுமூகமாக மோதுகின்றன. ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. கம்யூனிஸ்டு 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

திரிபுராவில் சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பழங்குடியின மக்களிடம் தனி செல்வாக்குடன் திகழும் இந்த கட்சி மற்ற 2 கூட்டணிகளுக்கும் கடும் சவால் விடுத்துள்ளது. இதனால் திரிபுரா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. 3 கூட்டணிகளிலும் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக அந்த மாநிலத்தில் விறுவிறுப்பான பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு சவால் விடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

நேற்று முன்தினம் மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து 60 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மொத்தம் 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் அதிகளவு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று இரவு டுவிட்டரில் அழைப்பு கொடுத்தார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயக திருவிழாவை பலப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வருமாறு அழைக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதை உறுதிபடுத்துவது போல இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஆர்வமுடன் வந்தனர். தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

திரிபுரா மாநிலத்தில் சுமார் 41 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 28 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். அவர்கள் அமைதியாக வாக்களிப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 31 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். திரிபுரா மாநிலத்தை சுற்றிலும் வங்கதேச நாடு, அசாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைகள் அமைந்துள்ளன.

இந்த எல்லைப் பகுதிகள் அனைத்தும் ஓட்டுப்பதிவை முன்னிட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு கருதி பதட்டமான 1,100 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 97 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் கையாளப்பட்டன. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 81.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. திரிபுராவில் ஏற்பட்டுள்ள மும்முனை போட்டி காரணமாக பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால் சுமார் 40 தொகுதிகளில் கடுமையான பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு கட்சிகளுக்கு தாவியது மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, வங்க மொழி பேசும் மக்களின் வாக்குகளை பிரிப்பதும், பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.

திரிபுராவின் 527 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் அமோக ஆதரவை திப்ரா மோத்தா கட்சி பெற்றிருக்கிறது. பழங்குடியின மக்களுக்காக உருவான இந்த கட்சியை திரிபுரா அரச பரம்பரையை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் வழி நடத்தி வருகிறார். மன்னரான இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பழங்குடியின மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். பழங்குடியின மக்களுக்காக ‘திப்ராலாந்து’ என்ற மாநிலத்தை உருவாக்க இந்த கட்சி போராடி வருகிறது.

இதன் காரணமாக பழங்குடியின மக்கள் வாக்குகள் இந்த கட்சிக்கு தான் கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் பழங்குடியின மக்கள் செல்வாக்கு மிகுந்த 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை பா.ஜனதாவுக்கு அந்தளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. இத்தனை சவால்களையும் கடந்து திரிபுராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்களே ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.