;
Athirady Tamil News

இந்தியாவில் உயர்ந்து வரும் நிலக்கரி உற்பத்தி- 16 சதவீதம் அதிகரிப்பு!!

0

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகள் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக அபரிமித வளா்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து படிம எரிபொருளை இறக்குமதி செய்வது கணிசமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில், கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 60.20 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி சுமாா் 47.81 கோடி டன்னிலிருந்து 15.23 சதவீதம் அதிகரித்து 55.10 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. மின் நுகா்வு தொடா்ந்து அதிகரித்து வருவதால் நிலக்கரிக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 73.10 கோடி டன்னாக இருந்து 2021-22-இல் 77.82 கோடி டன்னாக அதிகரித்தது. இது 6.47 சதவீத வளா்ச்சியாகும். 2024-25-ஆம் நிதியாண்டில் 131 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரித் துறை அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இது 2030-ஆம் நிதியாண்டில் 150 கோடி டன்னாக உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.