;
Athirady Tamil News

கோவிட் உருவாகி பரவியது எப்படி? – சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையின் முக்கிய அம்சம்!!

0

கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா கூறி வருகிறது. அதேநேரத்தில் சட்டத்துக்கு விரோதமான விலங்கு கடத்தல்கள் கரோனாவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில், கரோனா உருவாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீன ஆராய்ச்சியாளர்கள் வுஹான் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் ஆதாரங்களின் ஆய்வின் முதல் முடிவை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறும்போது, ”வுஹான் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் (இந்தப் பரிசோதனையில் ரக்கூன் நாய்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன) அவை காட்டு விலங்குகளின் மரப்பணுகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன்மூலம் கரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் வுஹான் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்வதற்கான சான்றுகள் கூடுதலாகியுள்ளன.

முன்னதாக “விலங்குகளிடமிருந்தே கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பாரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்து வந்தார். இந்த நிலையில், சீனாவின் நோய் தடுப்புத் துறையின் பரிசோதனைகளும் இதைத்தான் கூறியுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவிலிருந்து பரவிய கரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.