;
Athirady Tamil News

ஜெய் ஷா கிட்ட பேசி ஆளுக்கு 5 ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுங்க… கிண்டலாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

0

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். இதற்கு கிண்டலாக பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான்கு வருடமாக சென்னையில் போட்டியே நடக்கவில்லை, நீங்கள் யாருக்கு எப்போது டிக்கெட் வாங்கி கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை என்றார்.

“நான் எனது சொந்த செலவில் ஒவ்வொரு போட்டிக்கும் எனது தொகுதியில் இருந்து 150 விளையாட்டு வீரர்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து போட்டியை பார்க்க வைக்கிறேன். மேலும் ஐபிஎல் போட்டியை நடத்துவது பிசிசிஐ. உங்கள் நெருங்கிய நண்பர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அதற்கு தலைமை பொறுப்பில் உள்ளார். நீங்கள் அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தலா 5 டிக்கெட் வாங்கி கொடுங்கள். நாங்கள் காசு கொடுத்துகூட வாங்கிக்கொள்கிறோம்” என்றார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.