;
Athirady Tamil News

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்- மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரிக்கை!!

0

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கின. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரி இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி உள்ளார்.

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை துணை மந்திரி எமின் தபரோவா இந்தியா வந்துள்ளார். அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை மந்திரி மீனாட்சி லேகியிடம் வழங்கியதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில், உக்ரைனுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மந்திரி எமின் அளித்த பேட்டியில் கூறியதாவது:- உண்மையிலேயே இந்தியாவும், உக்ரைனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது. எங்களுக்கு இடையே ஒரு வரலாறு உள்ளது.

ஆனால் நாங்கள் இந்தியாவுடன் ஒரு புதிய உறவை தொடங்க விரும்புகிறோம். இந்தியாவும் கடினமான அண்டை நாடுகளை கொண்டுள்ளது. எப்போது எல்லாம் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதோ, அதைத்தடுக்கவில்லை என்றால் அதன் விளைவுகள் பெரியதாகி விடும். உக்ரைனில் பயின்ற வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் ஒருங்கிணைந்த மாநில தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படும். உக்ரைனில் உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.