;
Athirady Tamil News

வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்- இன்று முதல் பேரணி நடத்த ஏற்பாடு!!

0

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. வருகிற கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட இன்று முதல் (17-ந் தேதி) 28-ந்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தியுள்ளார். அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற பெயரில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், காற்றோட்டமான வகுப்பறை, குடிநீர், கழிப்பிட வசதி, தகுதியான ஆசிரியர்கள் போன்றவற்றை விளக்கி இப்பேரணி நடத்த வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரணி மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சத வீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 போன்ற முன்னுரிமை குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.