;
Athirady Tamil News

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது உயிரிழப்பு!!

0

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா என்பவர் நேற்று அன்னபூர்ணா சிகரத்தில் ஏறினார்.

சிகரத்தில் இருந்து இறங்கியபோது நான்காவது முகாமில் இரவு தங்கியிருந்த சமயத்தில் திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனை படைத்தவர் ஆவார். மேற்கு நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர் பிரான்ஸ் நாட்டின் மாரிஸ் ஹெர்சாக் ஆவார்.

இவர் 1950களின் முற்பகுதியில் இந்த சாதனையை படைத்தார். அதன்பின்னர் 365 பேர் சிகரத்தில் ஏறி உள்ளனர். மலையேற்றத்தின்போது 72 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த வாரம் ஷெர்பா வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உலகின் உயரமான 14 மலைகளில் 8 மலைகள் நேபாளத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.