;
Athirady Tamil News

நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு!!

0

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அர்ணவ் -திவ்யா அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறி உள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு. அவர் தான் என்னை துன்புறுத்தினார்.

இது தொடர்பாக எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.