நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை கொடுக்கக்கூட தயார்- மம்தா பானர்ஜி பேச்சு!!
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ரம்ஜான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும். சிலர் (பா.ஜனதா) வெறுப்பு அரசியலை புகுத்தி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டுக்காக உயிரை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிளவுப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம்.
எனது அரசியல் எரிதிகளின் பணபலம் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு எதிராக நான் போராட தயாராக இருக்கிறேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அரசியல் உள் நோக்கத்துடன் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் நான் தலைகுனிய மாட்டேன். பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியளிப்போம். ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அனைத்தும் முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.