சட்டசபை தேர்தல்- கர்நாடகாவில் ராகுல் காந்தி இன்று மீண்டும் பிரசாரம்!!
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஏற்கனவே அவர் கர்நாடகாவில் இரண்டு சுற்றுப்பயணம் செய்து கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். இதற்கிடையே இன்று மீண்டும் கர்நாடகாவுக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து ஹுப்பள்ளிக்கு செல்லும் ராகுல்காந்தி, சங்கமநாதர் கோவில் மற்றும் ஐக்ய லிங்கத்தை தரிசனம் செய்ய ஹெலிகாப்டரில் கூடல் சங்கமத்துக்கு செல்கிறார்.
12-ம் நூற்றாண்டின் கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ப.சவேஸ்வரா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவரது பிறந்தநாளான பசவ ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை விஜயபுராவுக்கு செல்லும் அவர் அங்கு ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். நாளை பெலகாவியில் ராம்துர்க்கில் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஹங்கலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பின் ராகுல்காந்தி டெல்லிக்கு புறப்படுவார்.