;
Athirady Tamil News

எமக்கு உதவி செய்த இந்தியாவை மறந்து விட முடியாது!!

0

இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது.எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது இன்றைய இந்த நிகழ்வானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர நிகழ்வாக அமைந்துள்ளது என பிரதமர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும் முத்திரை வெளியீடும் நிகழ்வும் நேற்று 23.04.2023 நடைபெற்றது.

இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்தனவும் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க யதாமினி குணவர்தன இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உதவி தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா ஆகியோரும் மற்றும் நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.தியான மண்டபத்திற்கான அனுசரனையை டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடுப்பத்தினர் வழங்குகின்றனர்.

தொடர்ந்து அங்கு பேசிய பிரதமர்,

இன்று சீதையம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தியான மண்டபத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.அதற்கு காரணம் அதற்கான நிதியை வழங்குகின்றவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இது ஒரு புறம் எங்களுடைய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற கலை கலாச்சார ரீதியான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. எங்களுடைய இரு நாட்டிற்கான உறவு பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது.

இந்தியாவின் இமயமலையின் பல பகுதிகளிலும் தியான மண்டபங்களும் அதற்கான சூழலும் அமைந்திருக்கின்றது. அதே போல இன்று இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகால மலையின் அடிவாரத்தில் சீதையம்மன் ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் மிகவும் அழகாக இராமயணத்திற்கும் இலங்கைக்குமான தொடர்பை விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்த இதிகாசமானது பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது. இலங்கை நாடானது இன்று முன்னோக்கி செல்கிறது என்றால் அதற்கு இந்தியா எங்களுக்கு செய்த உதவிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எங்களுடைய நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவின் பொழுது இந்தியாவின் உதவியானது நாம் மீண்டும் எழுந்து முன்னோக்கி நடப்பதற்கான அடித்தளத்தை வகுத்துள்ளது.

மதங்களுக்கு இடையிலான நெருங்கிய புரிந்துணர்வும் எமது பொருளாதார பின்னடைவின் பொழுது எமக்கு பல உதவிகளை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது.

புத்தரின் போதனைகள் எம்மை நல்வழிப்படுத்துவதற்கு ஒரு தலமாக அமைந்திருக்கின்றது. அதனை நாம் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். இன்று நாம் அனைத்து மதங்களுக்கும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றோம். என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.