பெண் பரிசாக கொடுத்த மீனை தொட்டதால் கோவிலுக்குள் செல்ல மறுத்த ராகுல் காந்தி!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடுப்பி மாவட்டம் காபுக்கு வந்திருந்தார். அவர் மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அந்த சமயத்தில் ராகுல்காந்திக்கு மீனவ பெண் ஒருவர் ராட்சத அஞ்சல் மீனை பரிசாக கொடுத்தார். அந்த மீனை கைகளில் வாங்கிய ராகுல் காந்தி அடுத்த நொடியே அருகில் இருந்த உதவியாளரிடம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியை அருகில் இருந்த உச்சில மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். ஆனால் ராகுல்காந்தி நான் கைகளில் மீனை தொட்டுள்ளேன். எனவே கோவிலுக்குள் செல்லலாமா என கேள்வி கேட்டார். அதற்கு அருகில் இருந்த காங்கிரசார், அது ஒன்றும் இல்லை உள்ளே செல்லுங்கள் என்றனர். இருப்பினும் மீனை தொட்டதால், ராகுல்காந்தி கோவிலுக்கு செல்ல தயக்கம் காட்டினார். மீனை தொட்ட கைகளை கழுவ தண்ணீர் கொடுங்கள் கேட்டார்.
ஆனால் உடனடியாக அங்கு தண்ணீர் கொண்டுவர சாத்தியமில்லை என்பதால், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் கோவிலுக்குள் செல்லும்படி கூறினர். ஆனால் ராகுல்காந்தி கோவிலுக்குள் செல்ல மறுத்து கைகளை கழுவ தண்ணீர் வேண்டும் என்று கைகளை பிசைந்து காட்டி அடம்பிடித்தார். பின்னர் கோவில் பூசாரியும், காங்கிரசாரும் அவரை கோவில் வளாகத்திற்குள் வரும்படி கூறினர். அப்படி இருந்தும் ஒரு வித தயக்கத்துடன் அவர் கோவில் வளாகத்திற்குள் சென்றார். அங்கு வந்ததும் பூசாரி அவருக்கு வரவேற்பு அளித்து கோவில் பிரசாரத்தை கொடுத்தார்.