;
Athirady Tamil News

பிரதமர் மோடி பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: குமாரசாமி பேட்டி!!

0

கொப்பல் மாவட்டத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டுள்ளனர். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி மக்களை பார்த்து கை அசைக்கிறார். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதா கட்சி என்ன செய்தது?. பா.ஜனதாவும், காங்கிரசும் கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக என்ன செய்துள்ளார்கள். விவசாயிகளுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பிரதமர் கூறுகிறார்.எங்கள் கட்சி விவசாயிளுக்கு என்ன செய்யவில்லை என்று விளக்கமாக கூற வேண்டும். பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

அவர், பிரதமராகி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அவரது அலை எங்கும் வீசவில்லை, தற்போது குறைந்து விட்டது. எனவே பிரதமர் மோடியின் பிரசாரம் இந்த சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சியினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதித்துள்ளனர். தடை விதிப்பதால், ஏதாவது பயன் கிடைக்க போகிறதா?. பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா?. அந்த அமைப்பை சேர்ந்தவர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

பஜ்ரங்தள அமைப்பிலும் ஒன்றும் அறியாத இளைஞர்கள் இருக்கிறார்கள்.அந்த இளைஞர்களிடம் ஏதாவது சொல்லி, அவர்களது வாழ்க்கையை பாழாக்குகின்றனர். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு ஒரு அமைப்புக்கு தடை விதிப்பது சரியானது இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்காமல் தற்போது சட்டதேர்தல் அறிக்கையில் தடை விதிப்பதாக கூறுவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.