தடம் புரண்ட பெங்களூரு டபுள் டெக்கர் ரயில்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!
சென்னையிலிருந்து பெங்களூருக்கு நேற்று காலை புறப்பட்டு சென்ற டபுள் டெக்கர் ரயில், ஆந்திர மாநிலம், குப்பம் அருகே தடம் புரண்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த ரயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, கர்நாடக மாநிலத்தை நெருங்கும்போது, ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்துள்ள குடுபல்லி மண்டலத்தில் உள்ள பிஸா நத்தம் ரயில் நிலையம் அருகே திடீரென இதன் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சுமார் 20 மீட்டர் வரை தரையிலேயே சென்றது. லோகோ பைலட் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.
இதனால் 4 பெட்டிகளில் இருந்த சுமார் 300 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பெங்களூருவிலிருந்து அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயிலை சரி பார்த்தனர். இந்த விபத்து காரணமாக இந்ததடத்தில் உள்ள குப்பம், ஜோலார்பேட்டை, பெங்களூருவில் சிலரயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றன.