திருப்பதி கோவிலில் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ் படை ஒத்திகை!!
திருப்பதி மலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனி ராமையா தலைமையில் ஆக்டோபஸ், காவல் துறை, தீயணைப்பு, வருவாய், மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ் படையினரின் மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகை நிறைவுக்குப் பின், ஆக்டோபஸ் கூடுதல் எஸ்.பி.நாகேஷ் பாபு கூறியதாவது:- திருப்பதி மலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான பாதுகாப்பு அமைப்பு இருப்பதால் எந்த பாதுகாப்பு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும், ஊழியர்களுடன் இதுபோன்ற மாதிரி ஒத்திகையை அடிக்கடி நடத்துவதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகளைப் போக்க முடியும். திருமலையில் எந்த இடத்தில் எவர் தாக்குதல் நடத்தினாலும் அவர்களை எப்படி விரட்டி அடிப்பது, பக்தர்களை பாதுகாப்பது எப்படி என்பதை அறிவதே மாதிரி ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
சமூக விரோத சக்திகளை எதிர்கொள்ளும்போது எந்தெந்த துறை என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது பவர் பாயின்ட் மூலம் விளக்கப்பட்டது. திருப்பதி அன்னமய்யா பவனில் நாளை காலை பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்களின் கேள்விகளுக்கு செயல் அலுவலர் தர்மா ரெட்டி பதிலளிக்க உள்ளார். கருத்துக்கள், குறைகளை தெரிவிக்க விரும்பும் பக்தர்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதியில் நேற்று 77,299 பேர் தரிசனம் செய்தனர். 30,479 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.