;
Athirady Tamil News

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது !!

0

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள போராடும் உரிமை இருக்கிறது.

அதனை யாருக்கும் தடுக்க முடியாது. என்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் மற்றும் கோயிகள் தொல்பொருள் ஆய்வு என்ற பேரில் அரசாங்கம் கைப்பற்றி வரும் நடவடிக்கையை நாங்கள் அதவதானித்து வருகிறோம்.

இந்த விடயங்களில் அந்த பிரதேசத்தில் இருக்கும் தேரர்களும் சம்பந்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மக்கள் தங்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் காணிகளை பாதுகாத்துக்கொள்ள போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அது அந்த மக்களின் உரிமை அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள பெளத்த விகாரைகளுக்கோ அங்குள்ள தேரர்களுக்கோ யாரும் கை வைத்ததாக இல்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகளின் காரணமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அங்குள்ள இந்துக்கோயில்களில் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது அதற்கு தடைகளை ஏற்படுத்தியதாலே பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கிறன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா களனியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது, வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

அவரின் இந்த கூற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல். அதனால் மேர்வின் சில்வாவின் இந்த கூற்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் மேர்வின் சில்வா போன்றவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருக்காமல் நாட்டில் அனுமதிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதன் மூலமே தமிழ் மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்படும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவருவதில் தொடர்ந்தும் இழுத்தடிக்கக்கூடாது என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.