;
Athirady Tamil News

அநீதிக்கு சபையில் சஜித் கண்டனம் !!

0

அரசாங்க தோட்டமொன்றில் நடந்த அநீதியை பாராளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (22) கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ் பகுதியில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தோட்ட உதவி முகாமையாளரால் கடந்த 19 ஆம் திகதி வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்காலிகமாக அவர்களுக்கு தங்க அனுமதிக்கப்பட்டிருந்த குடியிருப்புகளும் நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்திற்கு அமைச்சரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், அமைச்சர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று செயற்பட்டும் பயனில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகத்தை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும்,தோட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் வெற்றிகாணவில்லை என்றும் கூறினார்.

பெருந்தோட்ட சமூகத்தினரின் கடின உழைப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைப்பதாகவும், அம்மக்களின் சுகாதார மற்றும் கல்விப் பிரச்சினைகள் பல இருப்பதாகவும், தோட்ட மக்களின் வாக்குகளைப் பெறும்போது அரசாங்க அமைச்சர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், மலையக பெருந்தோட்ட சமூகம் அனைத்து தரப்பிலிருந்தும் குறைந்த கரிசனைகளே பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.