;
Athirady Tamil News

திருப்பதி அலிப்பிரி நடைபாதையில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவு- பக்தர்களுக்கு எச்சரிக்கை!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது. இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது. குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து தெரிந்துகொள்ள, சிறுத்தை ரத்த மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அலிப்பிரி நடைபாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து வனத்துறையினர் ஆங்காங்கே 300 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர். அதன்படி நடைபாதை முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில், நேற்று ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. 50 கேமராக்களில் பதிவான சிறுத்தை ஒன்று தானா? அல்லது சிறுத்தைகள் அதிகமாக உள்ளதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது. இது குறித்து திருப்பதி வனவிலங்கு மேலாண்மை வட்டத்தின் தலைமைப் பாதுகாவலர் நாகேஸ்வரராவ் கூறியதாவது:- நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கண்டறிந்து, நடைபாதைகளில் இருந்து விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறுத்தையின் தடவியல் மாதிரிகளின் அறிக்கை 15 நாட்களில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.