;
Athirady Tamil News

2 தடைகளையும் மீறி பறந்தவர் மீண்டும் பறந்தே வந்தார்!!

0

இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்து வந்துள்ளனர்.

அவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்திருந்தது.

இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடக இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த விமானத்துக்குச் செல்வதற்காக, ​​விமான நிலைய குடியகல்வு கருமபீடங்களில் அதிகாரிகள் இல்லாத கருமபீடத்தின் ஊடாக நுழைந்துள்ளார்.

அவரது செயலை அவதானித்த, குடியகல்வு செய்ய வந்த அவுஸ்திரேலிய பெண்ணொருவர் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, குடிவரவு அதிகாரிகள் குறித்த பெண்ணுடன் இந்த நபரைக் கண்டுபிடிக்கச் சென்றுள்ளனர், ஆனால் அவர் சம்பந்தப்பட்ட விமானத்திற்கு ஏற்கெனவே சென்றுவிட்டார்.

பின்னர், இந்த அதிகாரிகள் தலைமை குடியேற்ற அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு கமெரா அமைப்பைப் பார்த்து, அவரது விமான உரிமம் மற்றும் விமான டிக்கெட்டை கணினி அமைப்பு மூலம் பெற்று சரிபார்த்தபோது, ​​அவருக்கு எதிராக இரண்டு நீதிமன்றங்களால் விமான தடை விதிக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதன்படி, கட்டுநாயக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அதற்குள் இந்த விமானம் இலங்கை வான்பரப்பிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து விட்டது.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய இலங்கை விமான நடவடிக்கை முகாமையாளர் இந்த விமானத்தின் பிரதான விமானி, இந்தியாவின் மும்பையில் உள்ள விமான நிலைய செயல்பாட்டு முகாமையாளர் மற்றும் நாட்டின் விமான நடவடிக்கை கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தார்.

அதன்படி, இந்த பயணியை இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானத்தின் ஊடாக அழைத்து வந்து கட்டுநாயக்க குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பயணி விமான நிலைய குடியகல்வு கருமபீடத்துக்கு வரவில்லை என்றாலும், அவரது கடவுச்சீட்டில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரை இருந்தது.

கைது செய்யப்பட்ட பயணி மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.