;
Athirady Tamil News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலாளர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்!!

0

திருச்சியை சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருப்பையா சார்பில் கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் புகார் குறித்து வனத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார். பின்னர் நீதிபதி, கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்க மல்ல.

கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமதமாகிறது? கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து அரசு வக்கீல் மனுதாரர் தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.