;
Athirady Tamil News

வாழைப்பழ ஏற்றுமதிக்கு மற்றுமொரு நிலையம்!!

0

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையை பயன்படுத்தி புளிப்பு வாழைப்பழ ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் மூன்றாவது தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டை முறவசிஹேனேயில் நிர்மாணிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

புளிப்பு வாழை ஏற்றுமதி வலயமானது எம்பிலிப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மற்றும் செவனகல ஆகிய பகுதிகளில் 800 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி அமைக்கப்படவுள்ளது.

புளிப்பு வாழை ஏற்றுமதி முதலாவது வலயம் மற்றும் பதப்படுத்தும் நிலையம் இராஜாங்கனையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நிலையம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் பிரகாரம் இராஜாங்கனையில் 800 ஏக்கரிலும் யாழ்ப்பாணத்தில் 400 ஏக்கரிலும் புளிப்பு வாழை செய்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புளிப்பு வாழை ஏற்றுமதி பதப்படுத்தும் முறவசிஹேன நிலையத்தின் நிர்மாணப் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்திசெய்யுமாறு விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.