;
Athirady Tamil News

கோவையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை

0

கோவை, செல்வபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கோவை, செல்வபுரம் தெலுங்குபாளையம் அருகேயுள்ள மில் வீதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (53), பாட்டில் மூடி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது மனைவி விசித்ரா (45). இவா்களுக்கு பட்டப் படிப்பு முடித்த ஸ்ரீநிதி (21), 9-ஆம் வகுப்பு படிக்கும் ஜெயநிதி (15) என்ற இரு மகள்கள் உள்ளனா். ராமச்சந்திரன் கடந்த சில மாதங்களாக பணப் பிரச்னையால் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா் தான் வசிக்கும் வீட்டின் அருகே பல கோடி ரூபாய் செலவில் புதிதாக பங்களா கட்டி வந்தாா். அதற்காகவும், தொழில் அபிவிருத்திக்காகவும் தனது சொத்துகளை அடகு வைத்து ரூ. 20 கோடி வரை கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமச்சந்திரனின் வீட்டுக்கு அவரின் அக்கா ராணி (55) புதன்கிழமை சென்றுள்ளாா். அப்போது வீட்டில் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா் கூச்சலிட்டாா். இதையடுத்து வீட்டின் அருகே பாட்டில் மூடி தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்த தொழிலாளா்களும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களும் அங்கே சென்று பாா்த்தனா்.

இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சடலங்கள் கிடந்த படுக்கை அறையில் பொடிபோன்ற வெள்ளை நிற பொருளும், தண்ணீா் பாட்டிலும் இருந்ததால், அவா்கள் 4 பேரும் சயனைடை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். அதேபோல, விசித்ரா தற்கொலை செய்யும் முன் எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தனது கணவா் ராமச்சந்திரனின் பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவா் அதிகமாக கடன் வாங்கியது தங்களுக்குப் பிடிக்கவில்லை எனவும், இதை விரும்பாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் கூறுகையில், முதலில் விசித்ராவும், இரு மகள்களும் சோ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், அப்போது வேறு அறையில் இருந்த ராமச்சந்திரன் படுக்கை அறைக்குச் சென்று பாா்த்தபோது மனைவியும், மகள்களும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததால், தானும் சயனைடு கலந்த நீரைக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே விவரங்கள் தெரியவரும் என்றனா். இந்த தற்கொலை சம்பவத்துக்கு கடன் தொல்லைதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து செல்வபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.