;
Athirady Tamil News

பழுதடைந்த காருக்குள் கிடந்த 2 குழந்தைகளின் சடலம்… அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணி என்ன?

0

மும்பையில் மாயமான இரு குழந்தைகள் பழுதடைந்து நின்ற காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அண்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் மொகமத் ஷேக். இவருக்கு 7 வயதில் சாஜித் ஷேக் மற்றும் 5 வயதில் முஸ்கான் என இரு குழந்தைகள் இருந்தனர். புதன்கிழமை மாலை இரு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட சென்று நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த மொகமத் ஷேக்கும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குழந்தைகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை.

இது குறித்து அண்டாப் ஹில் போலீஸில் புகார் அளித்தநிலையில், போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கி அப்பகுதி முழுவதும் தேடினர். வீட்டருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக ஆய்வு செய்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

மொகமத் ஷேக்கின் வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் சிலர் பயன்படுத்தாத பழைய கார்களை நிறுத்தியிருந்தனர். பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பயனற்ற நிலையில் நின்றிருந்த கார்களுக்கு உள்ளே தனது செல்போன் டார்ச் மூலம் சோதனை செய்து பார்த்துள்ளார்.

அப்போது இரு குழந்தைகளும் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே கார் கதவை திறந்து இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளின் உடலிலும் எந்த காயங்களும் இல்லாத நிலையில், பழைய காருக்குள் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது கார் கதவு லாக் ஆகி, மூச்சுத்திணறி குழந்தைகள் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.