;
Athirady Tamil News

அம்பாறை மாவட்டத்தில் ரமழான் மாதத்தினையொட்டி உணவகங்களில் திடீர் சோதனை

0

ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட வேலைத்திட்டத்தை பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான, சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எம்.நௌஷாட், டொக்டர் ஜே.மதன், டொக்டர் என்.ரமேஷ், டொக்டர் திருமதி ஜீவா ஆகியோருடன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை (25) பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. உணவகங்களின் தரத்தை மேம்படுத்தி சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான உணவினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் சுகாதார உயரதிகாரி குறிப்பிட்டார்.

இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.