;
Athirady Tamil News

அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

0

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியிலுள்ள நகர சிவில் நீதிமன்றத்துக்கு மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சலில், அந்த நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, ஜிம்கானா கிளப் மற்றும் செகந்திராபாத் சிவில் நீதிமன்றம் ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஹைதரபாத்தின் முக்கிய 4 இடங்களிலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு நிறுவப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகள் அனைத்தும் பரபரப்பாகக் காட்சியளிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனைகளில், தற்போது வரை சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 8) அதிகாலை மர்ம நபர்கள் அனுப்பிய மிரட்டல் மின்னஞ்சலானது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.