;
Athirady Tamil News

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

0

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் 20,980 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 1,262 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தின் டெங்கு, கரோனா மற்றும் சிக்கன்குனியா பாதிப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள், தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன், மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அறிவுறுத்தல்களை வெளியிட்டனர்.

முன்னதாக, 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மக்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.