;
Athirady Tamil News

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், தற்போது வரை நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

பஞ்சாப் மாகாணத்தில், அடுத்த 48 மணிநேரத்தில் கனமழையானது மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமானது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிந்து, செனாப், ரவி மற்றும் சட்லூஜ் ஆகிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீர்நிலைகளின் அருகிலும் தாழ்வானப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு, பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ், நேற்று (ஆக.25) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அங்கு வசித்த சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும், பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் சுமார் 1,700-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.