இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயிர் தப்பிய பயணிகள்!
அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்து வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50-பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதுபோல, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சுமார் 50-பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்துகளும் தஞ்சாவூர் அருகே நெடார் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு பேருந்து இடது பக்கம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த நிலையிலும், மற்றொரு பேருந்து இடது பக்கம் மரத்தில் மோதியும் நின்றன.
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இவர்கள் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் நிலைய போலீஸார், போக்குவரத்தை சரிசெய்து, விபத்து குறித்து மேற்படி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.