ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸ்ஸாட் அமைப்புடன் இருவரும் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
மனித உரிமைக் அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சீனாவிற்கு அடுத்ததாக உலகில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது குறிப்பிடத்தக்கது.