;
Athirady Tamil News

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது  புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ்  மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு  முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களம், கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தடுத்து வைத்துள்ளது.

இது தொடர்பில் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்த தீபச்செல்வன் , அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள் எனது புத்தகத்தில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சின் அனுமதி உடன் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்நிலையில், கடந்த 17ஆம் திகதி கலாச்சார அமைச்சில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

அதில், எனது இலக்கிய எழுத்துச் செயற்பாடுகள் குறித்தும் குறித்த புத்தகங்களினுடைய முக்கியத்துவம் குறித்தும் எனது கருத்துக்களையும் தெரிவித்தேன்.

இலங்கை கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் என் சார்பில் சிங்கள தமிழ் எழுத்தாளர்களும் சட்டத்தரணியும் கலந்து கொண்டனர்.

எனினும் புத்தகங்கள் என்ன காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை இதன்போது குறிப்பிடவில்லை.

புத்தகங்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து சென்ற வேளையில் புத்தகங்கள் தொடர்பில் இந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதற்காக சிங்கள படைப்பாளிகள் இளைஞர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் சில மூத்த சிங்கள எழுத்தாளர்களை வைத்து இந்த புத்தக தடுப்புக்கு நியாயத்தை கற்பிக்க முயல்கிறது.

அதில் ஒரு சிங்கள எழுத்தாளர் தனக்கு தமிழ் தெரியாது என்றும் என்னுடைய புத்தகங்களை வாசிக்கவில்லை என்றும் ஆனால் இவற்றில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு தரும் விடயங்கள் உள்ளன என்றும் கூறுவது எந்த வகையில் ஏற்படையது?

புத்தகத்தை வாசிக்காமல் இவ்வாறு கருத்து கூறுகிறார்கள். இதுவே இனவாதமும் பாரபட்சமும் ஆகும்.

இந்த நிலையில் உடனடியாக என்னுடைய புத்தகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இது என் மீதான அடிப்படை மனித உரிமை மீறல் என்பதினாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.