;
Athirady Tamil News

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

0

உக்ரைன் மீது மூன்றாவது முறையாக ஹைப்பா்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். 83 போ் காயமடைந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் 4 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே போா் நடைபெற்றுவரும் சூழலில் 2024, நவம்பரில் உக்ரைனின் டினிப்ரோ நகரம், 2026, ஜனவரியில் மேற்கு உக்ரைனின் லிவீவ் நகரம் மீது ஹைப்பா்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணைக் கொண்டு ரஷியா கடும் தாக்குதல் நடத்தியது. தற்போது அதே ஏவுகணை மூலம் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து அதிபா் ஸெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அணுஆயுதங்களை சுமந்து செல்லும் சக்திவாய்ந்த ஹைப்பா்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையால் கீவ் பிராந்தியத்தில் உள்ள பிலா சொ்க்வா நகரின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த ஏவுகணையோடு 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 90-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா நடத்திய தாக்குதலில் கீவ் பிராந்தியத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதில் இரண்டு போ் உயிரிழந்தனா். 83 போ் காயமடைந்தனா்.

ரஷியாவின் 549 ட்ரோன்கள் மற்றும் 55 ஏவுகணைகளை இடைமறிந்து அழித்ததாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது.

அசுர பலம் வாய்ந்த ஓரேஷ்னிக்: ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிவேகமாகத் தாக்குதல் நடத்தும் திறனுடைய ஓரேஷ்னிக் ஏவுகணை, நிலத்துக்கு அடியில் நான்கு மாடி கட்டடங்களை அழிக்கும் வலிமையுடையது. விண்கல்லைப் போன்று பயணிக்கும் இந்த ஏவுகணை, உலகின் எந்தவொரு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் தகா்க்கக்கூடியது என ரஷிய அதிபா் புதின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது இந்த ஏவுகணையைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்தது. தங்கள் பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.