நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு
நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிர்மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
லங்கா விதுரலகே காமினி என்ற கைதி, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீர சூரிய முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த நபர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து குற்றவாளி கூண்டிலிருந்து உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறை அறைக்கு செல்லும் வழியில் கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சு மருந்தினை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அதனைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறைக்கைதி தொடர்பில் நுவரெலியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.